பிறப்பு
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
எழுத்துகளின் இடப்பிறப்பு
• உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
• வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
• மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
• இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
• ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு
உயிர் எழுத்துகள்
• அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
• இ, ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
• உ,ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
மெய் எழுத்துகள்
❖ க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
❖ ச் ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
❖ ட், ண் - ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
❖ த், ந் - ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
❖ ப், ம் - ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
❖ ய் - இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
❖ ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
❖ ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
❖ ள் - இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
❖ வ் - இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
❖ ற், ன் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
சார்பெழுத்துகள்
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
1. எழுத்துகளின் பிறப்பினை .......... வகையாகப்
பரிப்பர்.
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
2. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.
அ) அ, ஆ
ஆ) இ, ஈ
இ) உ, ஊ
ஈ) எ, ஏ
3. ஆய்த எழுத்தின் பிறப்பிடம்........
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) மூக்கு
ஈ) தலை
4. பொருத்துக.
அ) க்,ங் - 1. கடை நா, கடை அண்ணம் பொருந்த பிறக்கும்
ஆ) ச்,ஞ் - 2. பல்லின் அடியை நா நுனி பொருந்த பிறக்கும்
இ) ட்,ண் - 3. முதல் நா, முதல் அண்ணம் பொருந்த பிறக்கும்
ஈ) த்,ந் - 4. இடை நா, இடை அண்ணம் பொருந்த பிறக்கும்
அ) 3,4,2,1
ஆ) 3,4,1,2
இ) 4,3,2,1
ஈ) 4,3,1,2
5. நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப்
பொருந்த பிறக்கும் எழுத்து.
அ) ய்
ஆ) ல்
இ) ள்
ஈ) வ்
6. மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள்
தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து
அ) ய்
ஆ) ல்
இ) ள்
ஈ) வ்
7. மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுதலால்
பிறக்கும் எழுத்து.
அ) ய்
ஆ) ல்
இ) ள்
ஈ) வ்
8. மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால்
பிறக்கும் எழுத்து.
அ) ய்
ஆ) ல்
இ) ள்
ஈ) வ்
9. மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்
எழுத்துகள்
அ) ந், த்
ஆ) ப், ம்
இ) ர், ழ்
ஈ) ற், ன்
10. மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால்
பிறக்கும் எழுத்துகள்.
அ) ந், த்
ஆ) ப், ம்
இ) ர், ழ்
ஈ) ற், ன்




No comments:
Post a Comment