Breaking

Thursday, April 2, 2026

6TH TAMIL - பெயர்ச்சொல்


ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இப்பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை, பொருட்பெயர், இடப்பெயர், . காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்பனவாகும்.

பொருட்பெயர்
  • பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
  • (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
இடப்பெயர்
  • ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
  • (எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.
காலப்பெயர்
  • காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
  • (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.
சினைப்பெயர்
  • பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
  • (எ.கா.) கண், கை, இலை, கிளை.
பண்புப்பெயர்
  • பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
  • (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.
தொழிற்பெயர்
  • தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • (எ.கா) படித்தல், ஆடுதல், நடித்தல்.
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்று 
  • காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்
  • காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்
  • காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்
  • காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்
  • காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்
  • காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் - தொழிற்பெயர்

இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

இடுகுறிப்பெயர்

நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

(எ.கா.) மண், மரம், காற்று

இந்த இடுகுறிப் பெயர், இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இரண்டு வகைப்படும்.

இடுகுறிப் பொதுப்பெயர்

ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மரம்,காடு.

இடுகுறிச் சிறப்புப்பெயர்

ஓர் இடுகுறிப்பெயர், குறிப்பாக ஒரு பொருளை மட்டும் சிறப்பித்து கூறுவது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா) மா, கருவேலங்காடு.

காரணப்பெயர்

நம் முன்னோர் சில பொருள்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

இக்காரணப்பெயர், காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் என இரண்டு வகைப்படும்.

காரணப் பொதுப்பெயர்

காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) பறவை, அணி

காரணச் சிறப்புப்பெயர்

குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுன் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.

(எ.கா.) வளையல், மரங்கொத்தி


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கீழ்க்கண்டவற்றுள் இடுகுறிப்பெயர் எது.

அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி

2. கீழ்க்கண்டவற்றுள் காரணப்பெயரைக் குறிப்பிடுக.

அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை

3. கீழ்க்கண்டவற்றுள் இடுகுறிச்சிறப்புப் பெயரைக் குறிப்பிடுக.

அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை

4. கீழ்க்கண்டவற்றுள் இடுகுறிபொதுப் பெயரைக் குறிப்பிடுக.

அ) காற்று
ஆ) காடு
இ) சுவர்
ஈ) யானை

5. கீழ்க்கண்டவற்றுள் காரணப்பொதுப் பெயரைக் குறிப்பிடுக.

அ) வயல்
ஆ) மண் 
இ) மீன்கொத்தி
ஈ) பறவை

4. கீழ்க்கண்டவற்றுள் காரணச்சிறப்புப் பெயரைக் குறிப்பிடுக.

அ) காற்று
ஆ) மரங்கொத்தி
இ) சுவர்
ஈ) யானை

No comments:

Post a Comment