வல்லினம் மிகும் இடங்கள்
தற்கால உரைநடையில் வல்லினம் மிகவேண்டிய இடங்களாகக் கீழ்க்காண்பனவற்றைக் கூறலாம்.
1. அச்சட்டை
இந்தக்காலம்
எத்திசை?
எந்தப்பணம்?
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.
2. கதவைத்திற
தகவல்களைத்திரட்டு
காட்சியைப்பார்
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
3. முதியவருக்குக்கொடு
மெட்டுக்குப்பாட்டு
ஊருக்குச்செல்
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
4. எனக்கேட்டார்
வருவதாகக்கூறு
என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்.
மேலும் சில வல்லினம் மிகும் இடங்களை அறிந்துகொள்வோம்
அதற்குச் சொன்னேன்
இதற்குக் கொடு
எதற்குக் கேட்கிறாய்?
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
இனிக் காண்போம்
தனிச் சிறப்பு
இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்.
மிகப் பெரியவர்
மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின்பின் வல்லினம் மிகும்.
தீப் பிடித்தது
பூப் பந்தல்
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
கூவாக் குயில்
ஓடாக் குதிரை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகும்.
கேட்டுக் கொண்டான்
விற்றுச் சென்றான்
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.
ஆடச் சொன்னார்
ஓடிப் போனார்
(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.
புலித்தோல்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
கிழக்குப் பகுதி
வடக்குப் பக்கம்
திசைப் பெயர்களின்பின் வலிமிகும்.
மல்லிகைப்பூ
சித்திரைத்திங்கள்
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
தாமரைப்பாதம்
உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.
சாலப்பேசினார்
தவச்சிறிது
சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்.
நிலாச் சோறு
கனாக் கண்டேன்
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும்.
வாழ்க்கைப்படகு
உலகப்பந்து
சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.




No comments:
Post a Comment