
இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்
- வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
- இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
- வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
- “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
- இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.
தேம்பாவணி நூல் குறிப்பு
- தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
- கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
- தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் = யோசேபு (வளவன்)
- இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு
- 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
- இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
- இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
- தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான் மீதே. (2388)
சொல்லும் பொருளும்
சேக்கை - படுக்கை
யாக்கை - உடல்
பிணித்து - கட்டி
வாய்ந்த - பயனுள்ள
வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ. (2400)
சொல்லும் பொருளும்
தயங்கி - அசைந்து
இளங்கூழ் - இளம்பயிர்
காய்ந்தேன் - வருந்தினேன்
விரிந்தன கொம்பில் கொய்த
வீயென உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப் புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில் செல்லும்
தடவிலா தனித்தேன் அந்தோ! (2401)
சொல்லும் பொருளும்
கொம்பு- கிளை
புழை - துளை
கான் - காடு
தேம்ப - வாட
அசும்பு - நிலம்
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள். (2403)
சொல்லும் பொருளும்
உய்முறை - வாழும் வழி
ஓர்ந்த - நினைத்த
கடிந்து - விலக்கி
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே. (2410)
சொல்லும் பொருளும்
படலை - மாலை
துணர் - மலர்கள்
உவமணி - மணமலர்
காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய்மணி, உய்முறை, செய்முறை - வினைத்தொகைகள்
மெய்முறை - வேற்றுமைத்தொகை
கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
பகுபத உறுப்பிலக்கணம்
அறியேன் = அறி + ய் + (ஆ) + ஏன்
அறி - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
ஒலித்து = ஒலி + த் + த் + உ
ஒலி - பகுதி
த்- சந்தி
த்- இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி




No comments:
Post a Comment