Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 10, 2021

12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒப்படைப்பு வினாத்தாளுக்கான விடைகள் முழுமையும்

 இயல் 1

       பகுதி - அ

1. பலவுள் தெரிக.

1. 'இளந்தமிழே' என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

அ) வைரமுத்து

ஆ) சிற்பி பாலசுப்ரமணியம்

இ) கண்ணதாசன்

ஈ) பாரதியார்

விடை : ஆ.சிற்பி பாலசுப்ரமணியம் 

2. 'இளந்தமிழே' என்னும் நூல் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

அ) ஒரு கிராமத்து நதி

ஆ) நிலவுப்பூ

இ) ஒளிப்பறவை

ஈ) சர்ப்பயாகம்

விடை : ஆ . நிலவுப்பூ 

3. சிற்பியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?

அ) நிலவுப்பூ

ஆ) சூரியநிழல்

இ) ஒரு கிராமத்து நதி

ஈ) ஒளிப்பறவை

விடை : இ ) ஒரு கிராமத்து நதி

4. 'அலையும் சுவடும்' என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) சிற்பி பாலசுப்பிரமணியம் 

ஈ) தி.சு. நடராசன்

விடை :  இ ) சிற்பி பாலசுப்ரமணியம்

5. "மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு"- கவிஞர் குறிப்பிடும் பழைமை நலம்,

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது

அ) 1 மட்டும் சரி

ஆ)1, 2 மட்டும் சரி

இ) 3 மட்டும் சரி

ஈ) 1,3 மட்டும் சரி

விடை : ஈ ) 1 , 3 மட்டும் சரி

6. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

அ) யாப்பருங்கலக்காரிகை 

ஆ) தண்டியலங்காரம்

இ) தொல்காப்பியம்

ஈ) நன்னூல்

விடை : இ ) தொல்காப்பியம்

7. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழி"-

இவ்வடிகள் பயின்று வந்துள்ள தொடை நயம்

அ) அடிமோனை, அடி எதுகை 

ஆ) சீர் மோனை, சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர் மோனை

ஈ) சீர் எதுகை, அடி மோனை

விடை : இ ) அடிஎதுகை , சீர் மோனை 


8. பொருத்துக :

அ) தமிழ் அழகியல் -1.பரலி சு நெல்லையப்பர்

ஆ) நிலவுப்பூ             - 2. தி.சு. நடராசன்

இ) கிடை           -  3. சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ) உய்யும் வழி - 4. கி ராஜநாராயணன்

அ) 4,3,2,1

ஆ) 1,4,2,3

இ) 2,4,1,3 

ஈ) 2,3,4,1

விடை : ஈ ) 2 , 3 , 4 , 1

9. 'தமிழ் மொழியின் நடை அழகியல்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) கி. ராஜநாராயணன்
ஆ) தி.சு. நடராசன்
இ) பரலி.சு. நெல்லையப்பர்
ஈ) கவிஞர் சிற்பி

விடை : ஆ ) தி.சு.நடராசன்

10.'கிடை' என்னும் குறு நாவலின் ஆசிரியர் யார்?

அ) தி.சு. நடராசன்
ஆ) மு மேத்தா
இ) அகிலன்
ஈ) கி ராஜநாராயணன்

விடை : ஈ ) கி.இராஜநாராயணன்

                             பகுதி - ஆ
II.  குறுவினா

1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்துக்களைக் குறிப்பிடுக.

' நடைபெற்றியலும் ' ( கிளவியாக்கம் - 26 )
' நடை நவின்றொழுகும் ' ( செய்யுள் 35 )
 என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. 

   ஆசிரிய நடைத்தே வஞ்சி ; ஏனை
   வெண்பா நடைத்தே கலி ( செய்.107 ) 
என்றும் சொல்கிறது.


2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

        செங்கதிரவன் மலை உச்சியில் மாலை நேரத்தில் தலை சாய்க்கும்போது  , வானமெல்லாம் செந்நிறமான பூக்காடாக மாறுவது போல் உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் சிவந்து துன்பப்படும்.
உழைக்கும் தொழிலாளர் வியர்வை யாவும் அவர்களின் தோள்மீது முத்து முத்தாய் வீற்றிருக்கும்.

         இவையாவும் வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று கவிஞர் சிற்பி கூறுகிறார்.


3. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடரமைக்க.

         விடியல் வானம் வனப்பு மிகுந்தது.


4. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எழுதுக.

          கவிதையின் இயங்காற்றல்தான் நடை. அந்த நடையியல் வடிவமைப்பின் பகுதிகளையும் , முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது.
       
             நடையியல் கூறுகளுள் ஒலிக்கோலங்களும் , சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை.


5. எழுத்துப் பிழைகளை தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டியவை?

      மொழியின் இயல்பை உணர்ந்தும் , இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுத வேண்டும். 
தவறில்லாமல் எழுதச் சிறிதளவு முயற்சியும்  , பயிற்சியும் வேண்டும்.
எழுத்துகளைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும்.ஒலிப்பு வேறுபாடு தெரிந்து  ஒலிக்க வேண்டும்.

                    பகுதி - இ 

III  - சிறுவினா 

1 ) சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க பண்பாகும் - விளக்குக.

ஒலிப்பின்னல் : 

                எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும்  , இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. மொழி சார்ந்த கவிதையும்  இசையோடும் , இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.

       ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் பெறுகின்றன. இதுவே பாடலின் ஒலிப்பின்னலாகும்.

எழுத்துகள் எழுப்பும் ஒலிக்கோலம் :

   " படாஅம் ஈத்த கொடாஅ நல்லிசைக் 
     கடாஅ யானைக் கலிமான் பேக " 

- இந்தச் சங்கப் பாடலடிகளிலுள்ள படாஅம் , கொடாஅ , கடாஅ ஆகிய சொற்களில் வன்மையான உணர்ச்சியைக் காட்டும் விதத்தில்  ப , ட , த , க ஆகிய வல்லின மெய்கள் வந்து ஒலிக்கோலம் செய்கின்றன.

சொல் மீண்டும் வந்து எழுப்பும் ஒலிக்கோலம் 

 " புணரின் புணராது பொருளே ; பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே " 

- இந்தச் சங்கப்பாடலில் ' புணர் ' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒலிக்கோலம் செய்யும் அழகினைக் காணலாம்.

சந்த நயத்தோடு கூடிய ஒலிக்கோலம் :

 " நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை " - இந்தச் சங்கப்பாடலடியில் 'த ' கரமும்  ' ந ' கரமும் அமைந்த  'தந்தை ' என்னும் சொல் நான்கு சீர்களிலும் நான்கு முறை அமைந்து ஒலிக்கோலம் செய்யும் அழகு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

இவ்வாறு , சங்கப்பாடல்களில் ஒலிகளும் , சொற்களும் ஒலிக்கோலம் கொள்வது ஒரு பண்பாகும்.
2 ) ' செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்  செந்நிறத்துப் பூக்காடாம்  வானமெல்லாம் ' தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயம் :

      பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தினை உமிழ்கின்ற கதிரவன் , அந்தி மாலையில் மேற்குத் திசையில் மறையவிருக்கும் நேரத்தில் , செந்நிற ஒளிபரப்பி வான் முழுதும் செந்நிறத்தோடு விளங்குமாறு செய்கிறான்
 அக்காட்சி , வானம் சிவப்பு நிறத்தில் பூத்திருக்கும் பூக்காடு போல இருப்பதாய் நயம்படக் கூறுகிறார் சிற்பி அவர்கள்.

3 ) ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்.

இடம் :  ' ஓங்கலிடை ' எனத்தொடங்கும் பாடலில் சூரியனுக்கும் , தமிழுக்கும் முதலில் ஒப்புமை கூறும்போது ' ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ' என்றார் தண்டியலங்கார ஆசிரியர்.

பொருள் :  சூரியனும் , தமிழும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் உள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.

விளக்கம் :  சூரியன் உதயமால்வரையில் உலகிலுள்ள புற இருளைப் போக்குகிறது. பொதிய மலையில் தோன்றிய தமிழ் , மக்கள்  அகத்திலுள்ள அறியாமை இருளைப் போக்குகிறது என்பதாம் .


4 ) பொருள் வேற்றுமை அணி 


   அணி விளக்கம் :  

                    இருவேறு பொருள்களுக்கிடையேயான ஒற்றுமையை முதலில் கூறிப்பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி ஆகும்.

சான்று : 

" ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம் : 

           தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையேயான பயன்சார்நத ஒற்றுமையை முதலில் கூறி , அவற்றுள் தமிழ் தன்னேரில்லாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.

5 ) தண்டியலங்காரம் - சிறுகுறிப்பு.

* அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று.

* காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
* இதன் ஆசிரியர் தண்டி. இவர் கி.பி.( பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
* இந்நூல் பொதுவியல் , பொருளணியியல் , சொல்லணியியல் என்ற மூன்று பெரும்பிரிவுகளை உடையது.

* இலக்கண நூலார் , உரையாசிரியர்கள் பலரால்  எடுத்தாளப்பட்ட பெருமை உடையது.

                     பகுதி - ஈ 

IV ) நெடுவினா 

 1 ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க:

பாரதியின் கடிதம் - மொழிப்பற்று, சமூகப்பற்று

முன்னுரை

                    உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின்  மொழியாட்சி மாறுபடுகிறது.  கடிதவடிவில் சொல்லவேண்டியவற்றை  வெளியிடும் முறை உண்டு. கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களைத் தந்து அவற்றைப் பொது வெளிக்கு உரியதாக்குபவர்களும் இருக்கிறார்கள், காலத்தின் குரல்களான அக்கடிதங்களில் மொழி, வீறுபெறுகிறது.

தமிழில் புதுமை பூக்க வேண்டும்

                           நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.


                       ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டுப் பாஷைகள் தெரிந்திருந்து, அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத்
தெரிந்து கொள்ள முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்! தமிழ்,
தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில்
ஏறிக்கொண்டே போக வேண்டும்.

சமுதாய உணர்வு

தம்பி - உள்ளமே உலகம் !

ஏறு! ஏறு! ஏறு! மேலே மேலே! மேலே!

                     நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

மொழிஉணர்வும், சமுதாய உணர்வும்

          தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீனக் கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.
ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்மை செய்தோன், கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள், தொழில்கள் என்று கூவு.
வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

முடிவுரை

          *  ஓர் இனம் முன்னேற மொழி முன்னேற வேண்டும். மொழி முன்னேறினால் இனம் முன்னேறும். சமுதாயம் முன்னேறும். 

*  சமுதாயத்தில் நம்மினும் மெலியாரை வலிவுபெறச் செய்ய மொழி கருவியாகப்
பயன்படுகிறது. “தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்க” என்ற கடிதத்
தொடர் பாரதியின் பேச்சும், மூச்சும், எழுத்தும் தமிழ் என்பதற்கு அத்தாட்சியாகும்.

* “தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது” “ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது" "தொழில் தொழில்கள் என்று கூவு”, “வியாபாரம்
வளர்க” என்ற கடிதத் தொடர்கள் சமுதாயம் வலிவும் பொலிவும் பெற்று வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் உருவானவை.

*************     **************    ********



2 ) . தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுது.

தமிழின் சீரிளமைத் திறம் - சிற்பி பாலசுப்பிரமணியம்

முன்னுரை

             கவி பாரதி தமிழின் தொன்மையை, “என்று பிறந்தவள் என்று அறியாத இயல்பினள் எங்கள் தமிழ்த்தாய்” என்றார். இத்தகைய தொன்மைச் சிறப்பும், பன்மைச் சிறப்பும் மிகுந்த தமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப் பல்வேறு இலக்கணச் சிறப்புக்களைப் பெற்றுள்ளது. எனவே ஒரு வரையறைக்குள் வரம்பு கடவாது படைப்பிலக்கியங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப சில புதிய வரவுகளும் உண்டு. எனவே சீரிளமைத்திறம் பெற்றுச் சிறப்புடன் விளங்குகிறது.

பொருளுரை: ஏற்ற துணை இல்லை

                      செம்பரிதி மலைமுகட்டில் தவழ்ந்து கீழிறங்கி மேலைக் கடலில் தலைசாய்க்கத் தொடங்குகிறான். அந்திவானம் செந்நிறக் காட்சியால் பூக்காடாகத் திகழ்கிறது. அந்தச் செவ்வானம் போல் சிவந்த கையுடன் உழைப்பாளர் மனம் நோக உழைத்துவிட்டு இல்லம்  திரும்புகின்றனர்.

                  அவர்கள் உழைப்பால் சிந்திய வியர்வைத் துளிகள் தோள் மீது விம்மி முத்துக்களாய்க் காட்சி தருகின்றன. அவர்தம் உழைப்பின் பரிசாகக்கவிஞரால் தமிழ்த் துணையோடு வியந்துபாடத்தான் முடிந்தது. இதனை நீயே சொல்வாய் எனத் தமிழை விளிக்கிறார்.

முத்தமிழின் சுவை

            கவிஞர் உள்ளத்தில் எழும் உணர்ச்சி எனும் வேருக்கு உணவாய் தமிழ் உள்ளதாகக் கூறுகிறார்.

          முன்பு ஒருநாள் பாண்டிய மன்னர்தம் மனத்தில் இத்தகைய வெறி உணர்வு  தோன்றியதால் உருவானதுதான் முத்தமிழ் வளர்க்கும் மூன்று சங்கம். தமிழ் தவழும் தமிழ்நாடே! நீ பாரி முதல் கடையெழு வள்ளல்களையும், புரவலர்களையும் இவ்வுலகிற்குக்  கொடுத்தாய்.

                 மீண்டும் அந்தப் பழமைக்காலம் தமிழ்ப்படைப்பில், தமிழ்ப் பண்பாட்டில் நிலைக்க  வேண்டும். அதைத் தமிழ்க்குயில் இன்னிசையோடு கூவவேண்டும்.

            கூண்டினை உடைத்து எழும் சிங்கம் போலக் குளிர் பொதிகையில் தவழும் தென்தமிழே தமிழன் புதுமெருகுடன், தமிழ் புது வேகத்துடன் துள்ளித்திரிகிறது எனப் பாடத்தமிழே வா! வா! எனக் கவிஞர் அழைக்கிறார்.

முடிவுரை

            “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும்  வேண்டேன்” என்றார் தமிழ்விடு தூது ஆசிரியர். இத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் அறிவியல் தகவல் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய வரவுகளைத் தமிழ் உலகுக்குத் தரவேண்டும், என்பதே கவிஞரின் அவா! அவர்தம் அவாவினை இளந்தமிழே! என்ற இனிய தலைப்பில் கவிதை வரிகளாய்க் கனிச் சாறாய்க் கொடுத்துள்ளார்.

****************    **************   ***********

விடைத்தயாரிப்பு 

திருமதி.இரா. மனோன்மணி , 
முதுகலைத்தமிழாசிரியை , 
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்.

No comments:

Post a Comment