Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

11th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 3

நால்வகைச் சொற்கள்

கற்றல் விளைவுகள்

@ அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.

@ புதிய சொற்களைப் புரிந்து கொள்வதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

@ பல இதழ்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

     வா,மலர்,பட, தேன்,நூல்,பூ,சால, படி மட, கால் இதுபோன்ற சொற்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதி மாணவர்களிடம் பொருள் தரும் சொற்களைக் கூறச் செய்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். அவை

1 . பெயர்ச்சொல்

2 வினைச்சொல்

3 இடைச்சொல்

4 . உரிச்சொல்


1. பெயர்ச்சொல் :

      ஐம்புலனுக்கும் மனதிற்கும் புலப்படும் பொருள்களைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

ஒரு பொருளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ, காலத்தின் பெயரையோ குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.

இஃது ஆறு வகைப்படும். அவை,

* பொருட்பெயர்

புலி, கல்,

*  இடப்பெயர் வீடு, தமிழகம், நாடு.

* காலப்பெயர் கிழமை, ஆண்டு, மாதம், பருவம்.

* சினைப்பெயர் கை, கால், காது, கண், மார்பு, தோள், கூந்தல்.

* பண்புப்பெயர் வண்ணம், வடிவம், அளவு, ஒப்பு, அறிவு, சாதி, குடி, சிறப்பு.

* தொழிற்பெயர் புகழ்தல், ஓதல், ஈதல்.


செயல்பாடு : 2

2. வினைச்சொல் :

*  ஒரு மொழிக்கு இன்றியமையாத உறுப்பாக விளங்குவது வினைச்சொல் (verb) ஆகும் .

*  ஒரு பொருளின் புடைபெயர்ச்சியை ( movement) வெளிப்படுத்துவது வினைச்சொல்.

* வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள் குறித்த சொற்கள்.

அ. வினைமுற்றும், எச்சமும் :

*     வினையின் செயல் முற்றுப்பெறின் வினைமுற்று என்றும், முற்றுப்பெறாவிடின் எச்சம் என்றும் வழங்கப்பெறும்.

*  எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் என்றும், வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம் என்றும் அழைக்கப்பெறும் .

எடுத்துக்காட்டு :

* வந்தான் - வினைமுற்று

* வந்த மாணவன் - பெயரெச்சம்

* வந்து விழுந்தான் - வினையெச்சம்

ஆ. தெரிநிலை வினையும், குறிப்பு வினையும் :

* வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாகக் காட்டினால் தெரிநிலை வினை என்றும், வெளிப்படையாகத் தோன்றாமல் குறிப்பாகக் காலம் காட்டினால் குறிப்புவினை என்றும் அழைக்கப்படும்.

*  வந்தான் என்னும் வினைச்சொல் இறந்தகாலத்தைத் தெளிவாக உணர்த்துவதால் இவை தெரிநிலை வினைச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

*  (அவன்) நல்லவன் - குறிப்பு வினைமுற்று

*  நல்ல மாணவன் - குறிப்பு பெயரெச்சம்

* நன்று செய்தான் - குறிப்பு வினையெச்சம்

         நல்லவன், நல்ல, நன்று என்னும் சொற்கள் வெளிப்படையாகக் காலம் காட்டாமல் குறிப்பாகக் காலத்தை உணர்த்துவதால் இவை குறிப்புவினைகளாகும்.

செயல்பாடு : 3

3. இடைச்சொல் 

*  தனக்கென ஒரு பொருளின்றிப் பெயரொடும் வினையொடும் சார்ந்து அவ்வப்பொருளைத் தருவது இடைச்சொல் ஆகும்.

*  பெயரும் வினையும் போல தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாதது.

*  இடைச்சொல்லாக வருவன :

* ஐ, மற்று, உம், ஓ, ஏ, யா, கா, பிற, கூட, ஆன், அன், ஆ. ஆம், ஆவது மட்டும்.

எடுத்துக்காட்டு :

* ஐ - திருக்குறளை

* மற்று - மற்றொருவர்

* உம் - தந்தையும் தாயும்

செயல்பாடு : 4

4. உரிச்சொல் :

* நால்வகைச் சொற்களுள் செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வருவது உரிச்சொல் ஆகும்.

* பெயர், வினைச்சொற்களின் பண்பை உணர்த்தி அவற்றுக்கு உரிமை பெற்று நிற்பதால் உரிச்சொல் என்று கூறுதல்.

* உரிச்சொற்கள் ஒரு குணத்தையும், பல குணத்தையும் உணர்த்திப் பெயர் வினைகளைச்சார்ந்து வரும்.

* இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள் உணர்த்துவதற்குத் தாமே உரியன ஆதலின் உரிச்சொல் எனப் பெயர் பெற்றது

***************    *********   *********

           மாணவர் செயல்பாடு

         மாணவர்களிடம் சில தொடர்களைக் கொடுத்து அவற்றிலுள்ள நால்வகைச் சொற்களை அடையாளங் காணச் செய்தல். குறிப்பேட்டில் வகைப்படுத்தி எழுதச் செய்தல்.

மதிப்பீடு

1. இடைச்சொல்லுக்கு இரண்டு சான்று தருக.

* ஐ - திருக்குறளை
* மற்று - மற்றொருவர்
* உம் - தந்தையும் தாயும்

2. செய்யுளுக்கே உரிய சொல் எது ?

செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வருவது உரிச்சொல் ஆகும்.

சான்று : கடிமலர்

3. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

* பொருட்பெயர் - நாற்காலி
* இடப்பெயர் - வீடு
* காலப்பெயர் - தை
* சினைப்பெயர் - கை
* குணப்பெயர் - செம்மை
* தொழிற்பெயர் - ஆடல்

No comments:

Post a Comment